சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறதே! இதற்கு முடிவே இல்லையா? என்று தினமும்; அதிகமானோர் புலம்புவதைக் காணலாம். ஆனால் இவ்வுலகத்தின் சோதனைகளிலிருந்து தப்பியோர் யாரும் கிடையாது என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய உண்மை. அதாவது இவ்வுலகில் அல்லாஹ் நம்மைப் படைத்து, சகல வாழ்வாதார வசதிகளையும் நமக்களித்து, சீரான வாழ்க்கைப் பாதைகளையும் அமைத்துக் கொடுத்து நமக்கு இன்பங்களையும் துன்பங்களையும் மாறி மாறி வரச் செய்வதிலிருந்து இவ்வுலக வாழ்க்கையை ஒரு சோதனைக் களமாக, பரீட்சை மண்டபமாக ஆக்கியுள்ளான்.
நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான். (திருக்குர்ஆன் 29 : 2,3)
மேலும் கூறுகின்றான்:
ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோ, இரண்டு தடவையோ தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள் உணர மாட்டார்களா?பின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை.படிப்பினை பெறுவதுமில்லை. (அல்குர்ஆன்: 9:126)
ஒரு பரீட்சை எழுதுவதாக இருந்தால் கூட கஷ்டப்பட்டு கண்விழித்துப் படித்து, பரீட்சைக்குத் தேவையான தகவல்களை திரட்டுவதில் அலைந்து திரிந்து, பொழுது போக்கு அம்சங்களான தொலைக்காட்சி, வானொலி, நண்பர்களுடனான அரட்டை, விளையாட்டு போன்றவற்றை தியாகம் செய்து, கற்றோரிடம் ஆலோசனைகள் பல கேட்டு பரீட்சைக்குத் தயாராகிறோம். படித்து வெற்றி பெற்றால் தான் நல்ல தொழில் கிடைக்கும், கஷ்டப்படாமல் சம்பாதிக்கலாம் என்று விடாமுயற்சியுடன் படிக்கின்றோம். எல்லாம் எதற்காக? இந்த உலகத்திலே கஷ்டப்படாமல் வாழ்வதற்காக. அதுவும் நிரந்தரமில்லாத, எந்நேரமும் மரணம் வரலாம் என்ற நிலையற்ற வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக எல்லாத் துன்பங்களையும் சகித்துக் கொண்டு பரீட்சையை எதிர் கொள்கின்றோம்.
ஆனால் மறுமையில் நிரந்தரமான வெற்றி பெறுவதற்காக அமைக்கப்பட்ட இவ்வுலக வாழ்க்கையில் ஏற்படுகின்ற துக்கங்களை, துன்பங்களை, சோகங்களை, கஷ்டங்களை சகித்துக் கொள்ள நம்மால் முடிகின்றதா? அதற்கு ஒரு துளி கூட நம்மிடம் பொறுமை இல்லை என்று தான் கூறலாம். அல்லாஹ் கூறுகிறான்,
நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்!அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.(அல்குர்ஆன் 2 : 153)
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன்: 2:155)
அல்லாஹ் எல்லா வழிகளிலும் நமக்கு சோதனையை ஏற்படுத்துவான். வறுமையை வழங்கி, செல்வத்தை வழங்கி, நம் உயிர்களைப் பறித்து, நம் சொத்துக்களில் இழப்புகளை ஏற்படுத்தி நம்மை நிச்சயம் சோதனை செய்வான். ஆனால் நாம் நம்பிக்கை இழக்காமல் அவனிடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்று முஃமின்களுக்கு கட்டளையிடுகிறான்.
நாம் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் எந்த அளவுக்கு அல்லாஹ் மீது நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று நம்மை அவன் சோதிக்கிறான். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுமாறும் கூறுகிறான். மனிதன் செல்வம் வந்தால், அல்லாஹ்வையே மறந்து ஆடம்பரமாக நடந்து கொள்கின்றானா? அல்லது அச்செல்வத்தை அல்லாஹ் தடுத்த வழிகளில் செலவிடுகின்றானா? அல்லது நன்மையான காரியங்களில் செலவிடுகின்றானா? என்றும் வறுமை வந்தால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கையிழந்து அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானா? அல்லது அல்லாஹ் அல்லாதவை களிடம் உதவி தேடுகின்றானா? அல்லது பொறுமையுடன் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுகின்றானா? என்றும் சோதிக்கின்றான்.
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.(திருக்குர்ஆன் 2 : 286)
அது மட்டுமல்ல ஆரோக்கியத்தை வழங்கியும் நோய் நொடிகளை வழங்கியும் அல்லாஹ் நம்மை சோதித்துப் பார்க்கின்றான். ஆகவே நம் வாழ்க்கையில் நிகழும் அனைத்து சம்பவங்களும், நமக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்துமே சோதனை தான். அதனை ஒவ்வொரு முஃமினும் முதலில் உணர்ந்து